×

இந்தியாவை காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் தீவிர பிரசாரம்

சென்னை, ஏப்.4: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் துறைமுகம் மேற்கு பகுதியில் நேற்று வீதி வாரியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன், அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுகவினர், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் சென்று ஆதரவு திரட்டினர். அப்போது, தயாநிதி மாறன் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி சார்பாக திமுக சார்பாக என்னை உங்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். உங்கள் மீது உள்ள நம்பிக்கையில்தான். கண்டிப்பாக இந்த தேர்தலில் நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இதுவரை எதுவும் செய்யவில்லை.

ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைப்பேன் என்று சொன்னவர் அதை மறந்து விட்டு ஒரு ரூபாய் கூட யாருடைய கணக்கிலும் வரவு வைக்கவில்லை. இதுவரை மொத்தம் தமிழகத்திற்கு 8 முறை வந்துள்ளார். ஆனால் வரலாறு காணாத வெள்ளம் வந்தபோது வரவில்லை. நமக்கு துன்பம் வந்த போது நமது முதல்வர் உடனே டெல்லி சென்று மோடியிடம் கேட்டதற்கு இதோ தருகிறேன் என்று கூறிவிட்டு ஒரு நயா பைசா கூட தரவில்லை. ஆனால் நமது முதல்வர் நான் தருகிறேன் என்று கூறி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.6000 தந்தார். இப்போது மோடி மூன்று முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். நம்மை வந்து பார்த்தாரா, எதுவும் கேட்டாரா இல்லை. மழை வெள்ளத்தில் வராத போது இப்போது வாக்குக்காக வருகிறார்.

இன்று சொல்கிறார், தமிழ் என் தாய்மொழியாக இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. தேர்தல் வந்தால் தமிழ் மீது பாசம். தமிழர்கள் மீது பாசம். ஆனால் நாம் துன்பப்பட்டபோது எட்டி கூட பார்க்காமல் இருந்தவர்தான் மோடி. உங்கள் நண்பர் அதானி இலங்கையில் ஒரு பெரிய துறைமுகம் கட்டியிருக்கிறாரே? அதானிக்கு கச்சத்தீவை மீட்டு தந்து இருக்கலாமே? தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரை ஒன்றுகூட செய்யவில்லையே. நாம் கொடுக்கிற ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் நமக்கு திரும்பக் கிடைப்பது 29 காசு மட்டும் தான். உத்தரபிரதேசத்திற்கு 2 ரூபாய் தருகிறார். பீகாருக்கு 7 ரூபாய் தருகிறார். நாம் தருகிற வட்டி பணத்தை அவர்கள் ஆளும் மாநிலத்திற்கு அதிகமாகவே கொடுக்கிறார்.

இங்கு தாய்மார்களெல்லாம் இருக்கிறீர்கள். நாங்கள் என்ன கேட்டோம்? எங்கள் பிள்ளைகளுக்கு வேலைதானே கேட்டோம், மோடி என்ன சொன்னார்? நான் பிரதமராக வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார், தந்தாரா? இல்லையே.. ஒன்றிய அரசு ஒரு தமிழர்களுக்குக் கூட வேலை வாய்ப்பு தரவில்லை. ரயில்வேக்கு போனால் இந்தி பேசுகிறவர்கள் தானே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்கும் வேலை வாய்ப்பே தரவில்லை. இந்த நிலை மாறிட வேண்டும்.

இந்தியாவை காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெல்ல போகிறது. அப்படி வெல்ல போகும் போது கண்டிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வருவார். அப்படி பிரதமராக வரும்போது நம் உரிமைகளெல்லாம் பெற்று மீண்டும் தமிழ்நாடு வென்றிட வேண்டும். அதற்காக ஏப்ரல் 19ம் தேதி உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஒரு வாய்ப்பினை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது, திமுக மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பாக முகவர்கள், பிஎல்சி உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் என ஏராளமானோர் திரண்டு சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.

The post இந்தியாவை காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : India Alliance ,India ,Madhya Pradesh ,Dayanidhi Maran ,Chennai ,DMK ,Madhya Chennai Parliamentary Constituency ,Harbor ,Minister ,Shekharbabu ,Central Chennai ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...